Monday, November 9, 2015

அந்த 13 நாட்கள்

ஒரு நிமிஷம். தயவு பண்ணி உங்க கற்பனைக் குதிரைய அடக்கி வைங்க. நான் சொல்ல வந்தது என்னன்னா, அனு இல்லாம பசங்களை வெச்சிட்டு 13 நாட்களை எப்படி ஓட்டினேன் அப்படிங்கறது தான்.

இதன் பின்னணி பற்றி தெரியாதவர்களுக்கு - அனுவின் அப்பா உடல்நலம் சரி இல்லாததால் அனு அவசரமாக இந்தியா கிளம்ப வேண்டி வந்தது. ஆக, பசங்களை நான் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். இதை படித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு இது ஒரு புது அனுபவம். அனுவோடு மட்டும், அனு மற்றும் குழந்தைகளோடும்  அல்லது தனியாக கூட இருந்திருக்கிறேன். இந்த 13 நாட்கள் (அனு கிளம்பிய மற்றும் திரும்பும் தினங்கள் உட்பட) எப்படி இருந்தது, எவ்வாறு அனைத்தையும் வெற்றிகரமாக செய்தேன் என்று அசை போடுவதோடு நிற்காமல் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதன் விளைவு தான் இந்த பதிவு. சரி, என்னோடு காலச் சக்கரத்தில் என் வெற்றிப் பயணத்தில் பயணிக்க வாருங்கள்.

அனுவை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு குழந்தைகளுடன் வீடு திரும்பிய நொடியிலிருந்து நான் வெற்றிகரமாக செய்து முடித்தவைகளின் பட்டியல்.

அன்று இரவு உணவில் ஆரம்பித்து, அனைத்து நாட்களிலும் நானே வீட்டில் அயராது சமைத்து கொடுத்தேன். இதில் இரு வேளை இரவு  வெளியில் சாப்பிட்டோம், ஒரு இரவு எங்கள் அபார்ட்மெண்ட்-ல் நண்பர் வீட்டில் மற்றும் ஓர் இரவு எங்கள் வீட்டில் உண்ட பிறகும் வரவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்திய அன்புக்காக சிறிது உண்டோம்.  இது தவிர முழுக்க முழுக்க நானே தான்.  சமைத்தால் முடிந்ததா என்ன? அந்த பாத்திரம் எல்லாம் கழுவி மறுநாள் அதை அடுக்கி வைத்து என அது தான் பெரிய வேலையே. ஆனாலும் சிறப்பாக செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

காலையில்  பிள்ளைகளை எழுப்பி, அதிதி-யிடம் பல் விளக்கு, ஏதேனும் சாப்பிடு, குளித்துவிட்டு வா, உடைகளை அணி, சீக்கிரம் சாப்பிடு, தண்ணி குடி / கொப்பளி, காலணி போட்டியா, சீப்பு/ரப்பர் பேண்ட்  கொண்டு வா, பள்ளிக்கூட பையில் எல்லாம் இருக்கா என்று பர பர என்று இருக்கும். இதில் திங்கள் அன்று அத்ரித்-தும் பள்ளிக்கு போக வேண்டும். ஆக 2 பேரிடமும் இந்த போர் நடக்கும். இதில் அவனுக்கு அனைத்தையும் நான் தான் செய்ய வேண்டும். இவை போதாதென்று பள்ளி முடித்து அழைத்துவரும் பொழுது அவர்கள் சாப்பிட நொறுக்குவதற்கு பார்த்து கொண்டு போகணும். மற்ற பிற வகுப்புக்கு போக வேண்டிய நாள் என்றால் பள்ளியில் இருந்து அங்கே நேரே கூட்டிப் போய் வர வேண்டும். இவை எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் டிவி கொஞ்ச நேரம் பார்க்க சொல்லி சில நாட்களில் என்னால் முடிந்த பொழுது பால் அருந்த தர வேண்டும். பிறகு அந்த வார வீட்டுப்பாடங்களை எல்லாம் செய்து முடிக்க உதவணும். இதில் நடுவே இயற்கை அழைப்புகளுக்கும் உதவணும். எல்லாம் முடிந்து இரவு சாப்பிட்டதும் இருவருக்கும் பல் துலக்கி / பல்லிடுக்கு நூலால் சுத்தம் செய்து படுக்க வைக்க வேண்டும். சில நாளில் நானும் கூட படுக்க வேண்டும் என்று சொல்ல நானும் படுத்து அவர்களுக்கு முன்னால் தூங்கியும் இருக்கேன். இதை விட அவர்களுக்கு பெரிய உதவி என்ன இருக்க முடியும், சொல்லுங்கள்?

வாரக்கடைசியில் சனியன்று இதர வகுப்புகளுக்கு இருவரையும் கூட்டி சென்று வர வேண்டும். ஞாயிறன்று தலை குளியல் அவசியம் இருவருக்கும். அன்று மாலை கோவிலுக்கு கூட்டிப் போய் வர வேண்டும்.

குளித்தவுடன் விழும் துணிகளை 2-3 நாட்களுக்கு ஒரு முறை துவைத்து, காயப் போட்டு, அதை எடுத்து மெத்தை மேல் கடாசிவிட்டு முடியும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மடித்து வைக்க வேண்டும். இதில நடுவே மழை வேறு, துணி காயவில்லை. உள்ளே ஹீட்டர் போட்டு காய வைக்க வேண்டும். அப்பப்போ துணி அயன் செய்ய வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், பால், தயிர் என்று வாங்குவதை விட அத்தியாவசியமானது பசங்களுக்கு நொறுக்கு தீனி வாங்கி வைத்துக்கொள்வது. வாங்கியே ஆக வேண்டும். "இல்லை என்றால்?" என்று கேட்பவர்கள் ஒரு முறை தானே போய் மனைவியை ஒரு வாரம் டூர் அனுப்பிவிட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

திடீரென்று கண்ணில் படும் நாட்காட்டியில்3-4 நாளுக்கு சேர்த்து கிழிக்க வேண்டும்.

சேரும் குப்பைகளை இரு நாளுக்கு ஒரு முறை அப்புறபடுத்தியே ஆக வேண்டும்.

இவை எல்லாவற்றிக்கும் நடுவில் என் அலுவலக வேலையும் பார்த்தாக வேண்டும் (அட நிஜமாவே தான்...சொன்ன கேளுங்கப்பா).

இத படிக்கிறப்போ அடடா எவ்வளவு செஞ்சிருக்கான் இவன்-னு என்னை பற்றி யோசித்த ஈர நெஞ்சங்களுக்கு (ஒன்றிரண்டாவது இருக்கிறதா என்ன??) என் நன்றிகள் கோடி. அப்படி யோசிக்காத மத்தவங்களுக்கும் சேர்த்து சொல்றேன். பார்தீங்களா எவ்வளவு விசயத்த அனாவசியமா செஞ்சிருகேன்னு.

இருங்க இதோட முடியலை. மேலே நீங்க படிச்சது எல்லாம் என்னோட சுயபுராணம், விளம்பரம், தம்பட்டம் எப்படினாலும் சொல்லிக்கலாம். மேலே கூறியள்ள அனைத்தும் ... ஹே யாருப்பா கற்பனையே-னு கூவறது? நல்லா இதுக்குனே இருப்பாங்களே சிலர். முன்னாடியே சொன்ன மாதிரி உங்க கற்பனைக் குதிரைய நல்லா புடிச்சி கட்டி வைங்க, புரியுதா? இப்போ நான் சொல்ல வந்தது என்ன-னா நான் என்னதான் இப்படி கதறி கதறி பேசினாலும், எப்படி appraisal சமயத்தில் employee பக்கம் பக்கமா நான் இது பண்ணேன், அது பண்ணேன், நான் இல்லனா ஒண்ணும் செய்திருக்க முடியாது-னு எல்லாம் சொன்னாலும், மேனேஜர்  இரத்தின சுருக்கமா "நீ ஒண்ணும் கழட்டல"-னு ஒரு வரியில சொல்லிட்டு "அடுத்த முறை இன்னும் எதிர்பார்க்கிறேன்"-னு சொல்லி Meeting the Expectations என்று சாத்திட்டு போய்டுவார்.

ஆக எப்படி நான் ஒரு வீர தீர பராக்கிரம சீலன் என்று என் பக்கத்துக்கு நிகழ்வுகளை சொன்னேனோ, அதுபோல, என்னோட இந்த புராணத்தில் பயணித்த என் இரு கண்மணிகள் இந்த நாட்களில் என்ன யோசிச்சிருப்பாங்க-னு ஒரு சிந்தனை, இப்போ பாக்கலாம்.

"அப்பா, அம்மா வேணும்" - இப்படி பசங்க விமான நிலையத்தில் சொன்னப்போ சரி அம்மா கிளம்பறதால அப்படி கேக்கறாங்கனு நினைத்து "வந்துடுவாங்க டா" என்று சமாதனப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனால், ஒவ்வொரு நாளும் இதையே கேட்டுட்டு இருப்பாங்கனு நினைக்கல. போதாக்குறைக்கு, அம்மா-வோடு skype-இல் பேசும் பொழுது எல்லாம் "எப்போமா வருவ?" என்று கேட்பது வாடிக்கையா இருந்தது. எதனால் அப்படி கேட்டாங்கனு யோசிச்சி என்ன பட்டமா வாங்க போறேன்? மற்றும் இப்போ அது ரொம்ப முக்கியம் கிடையாது. அவங்க அம்மா இல்லாத சமயம், என்னை பற்றி, என் மாபெரும் பணியை பற்றி என்ன சொல்லி இருப்பாங்க? கேட்டுத்தான் பாக்கலாமே?
"குட்டிஸ், அப்பா உங்கள நல்லா பாத்துக்கிடாங்களா?" "அவர் எங்க பாத்துகிட்டார், நாங்களே தான் தேவையானதா கேட்டு கேட்டு வாங்கிகிட்டோம். சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை".
"சாப்பாடு நல்லா செஞ்சாங்களா?" "ஹ்ம்ம்...ஜெல்லி கேட்டால் தரவே மாட்டாங்க? அம்மா மாதிரி இல்லை" (இதுல சாப்பாடு எங்க இருக்குனு கொஞ்சம் கேளுங்களேன்)
"ஜாலியா இருந்ததா அப்பா கூட?" "நாங்க சாப்பிடறப்போ, படிக்கிறப்போ,  விளையாடரப்போ, தூங்கறப்போ எல்லாம் அப்பா TV பாக்கவே விடல. friends கூட விளையாட அனுப்பவே இல்லை. சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை"
"வெளியில எல்லாம் கூட்டிட்டு போனாங்களா?" "பார்க் ஒரு 3 மணி நேரம்தான் கூட்டிட்டு போனாங்க. அவ்ளோதான். சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை"
கொலைவெறி-யா ஒரு கேள்வி..."அப்பா வேணுமா அம்மா வேணுமா?" "(என்ன இப்டி பக்கிதனமா ஒரு கேள்வின்னு நெனச்சிட்டு தான் சொல்லுவாங்க) அம்மா தான். அப்பா எப்போ பாத்தாலும் திட்டிட்டே இருக்காங்க. பால், மம்மு, பழம் மட்டும் தான் தந்தாங்க. அம்மா வரட்டும் சொல்றோம். அம்மா இருந்தா தான் நல்லா இருக்கும். அப்பா சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை"

இந்த கடைசி கேள்விக்கு அப்புறமும் என்னோட இந்த ரெண்டு குட்டி மேனேஜர் குடுத்த மதிப்பீடு பத்தி எதனா கேக்கணுமா என்ன? வேண்டாம்பா விடுங்க.

இந்த உலகமே இப்படித்தான் கொடூரமான முடிவை நம்ம மேல சுமத்தும். கூட இருந்து நான் செய்த அனைத்தையும் பாத்த இந்த ரெண்டு மேனேஜரிடமே இப்படி ஒரு மதிப்பீட்டுக்கு மேல் எதிர்பார்க்க முடியாதப்போ, மேனேஜர் சொல்றத கேட்டுகிற மற்றும் நம்ம பக்கத்திலே இல்லாத CEO கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்? அட, சரிதான்பா, சரியா தான் சொல்ற, அட யாருப்பா அது, கொஞ்சம் சத்தமா சொல்லு. அதே தான். அனு-வை தான் சொல்றேன். எங்க வீட்டு CEO அங்க இருக்கும் போதே, பாவம் பசங்கள ஏன் போட்டு படுத்தறீங்க? நான் வர வரைக்கும் எதோ பண்ணிட்டு போகட்டும் விடுங்க. இப்படி சொல்லிடு இருந்தவங்க கிட்ட நான் மதிப்பீடு வேற எதிர்பாத்தேன் அப்டினா அதுக்கு பேர் மடத்தனம். அதனால் CEO-வின் முடிவு பற்றி பேசி நேரத்தை விரயம் பண்ண விரும்பவில்லை நான். அவ்ளோதான் விஷயமே. வேற எதுவும் இல்லை போய் உங்க வேலைய பாருங்கப்பா.

நான் சொல்ல வந்தது என்ன அப்டினா வேலையை செய், ஆனால் எதையும் எதிர்பாராது செய். அவ்ளோதான். என்ன, நானும் இப்போ மேனேஜர் மாதிரி பேசறேனா? நாமளும் வளர வேண்டாமோ? ஹிஹிஹி.

என்ன தான் சொன்னாலும், இந்த நேரத்தில் என் நன்றியை சிலருக்கு சொல்லியே ஆகணும். முதலில் எங்க ஆபீசில் நிலைமையை அறிந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ள வசதியாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதித்ததற்கு. அடுத்து எங்களின் கற்கண்டுகள். நான் என்ன செய்தாலும் வளைந்து கொடுத்து, என்னை தட்டி குடுத்து அனு இல்லாத குறையை தீர்த்த எங்களை பாக்கியசாலி ஆக்கிய எங்கள் மதிப்பில்லா சொத்து. சில நேரத்தில் என் நிதானத்தை இழந்து கடிந்து சத்தம் போட்டாலும் சில மணித்துளிகளில் வந்து கட்டி கொண்டு அப்பா என்றதும் "இதை விட வேறென்ன வேண்டும்" என்றெண்ண தோன்றும். அடுத்து அனு-வை சொல்ல வேண்டும். அனு-வின் blog-ஐ பார்த்து என்னால் முடிந்த எதோ ஒன்று செய்து whatsapp-இல் போட்டோ போட்டோ-வாக அனுப்பி "பாத்தியா? பாத்தியா?"னு பீற்றிக்  கொள்ளும்போதெல்லாம் "அடேங்கப்பா...கலக்கறீங்க. உங்க பசங்களுக்கு உங்க சமையல் தான் ரொம்ப பிடிக்கும்". அங்கே இருந்த கடினமான சூழ்நிலையின் தாக்கம் என்னை அண்டாத வகையில் "முடிந்த அளவுக்கு பண்ணுங்க, நான் வந்து பாத்துக்கறேன்" - இப்படி எல்லாம் சொல்லி என்னை ஒரு மேதாவின்னு நெனப்புல மிதக்க விட்டு வேற பதற்றம் ஏதும் தொற்றிக்கொள்ளாத வகையில் தைரியம் கொடுத்து பார்த்துக் கொண்டதுக்கு. கடைசியா இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுத்தி தந்ததற்கு கடவுளுக்கு நன்றி பல சொல்லியே ஆக வேண்டும்.

இவ்வளவு சொல்லிட்டு கருத்து எதுவும் இல்லேன்னா எப்படி? என்ன தான் மோசமான ஒரு நிலையில் இருக்கோம்னு ஒரு உணர்வு இருந்தாலும், கடவுள் கைவிட மாட்டார் மற்றும் எல்லாம் ஒரு நன்மைக்கே என்று நம் பயணத்தை தொடர வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான் என் பயணமும். நீங்களும் கூட பயனித்ததற்க்கு நன்றி. இந்த நிறுத்தத்தில் இறங்கி உங்களின் பயணத்தை தொடருங்கள். மீண்டும் நம் பயணத்தில் எங்கோ நாம் சந்திக்கும் வரையில்...நன்றி!!

1 comment: